‘இந்திய அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார்’ - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை


‘இந்திய அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார்’ - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:44 PM GMT (Updated: 14 Dec 2019 11:44 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை தெரிவித்தார்.


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் குறித்து நாங்கள் ஏன்? அதிகம் பேசுகிறோம் என்றால் அந்த அளவுக்கு அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. அவர் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருக்க முடியும் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அவர் சிறந்த வீரர் என்று நாங்கள் எல்லோரும் நம்புகிறோம். அவர் தனது ஆட்டத்திலும், உடல் தகுதியிலும் மேம்பாடு காண கடுமையாக உழைக்கிறார். ஒருநாள் போட்டியில் கடந்த காலங்களில் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் ரன் குவிக்க தொடங்கி விட்டால் அணிக்கு பெரிய பங்களிப்பு அளிக்கக்கூடியவராக மட்டுமின்றி மேட்ச் வின்னராகவும் இருப்பார்.

ரிஷாப் பண்ட் தனது பழைய நிலைக்கு திரும்ப அவருக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். அதற்குரிய காலம் வந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. குறிப்பிட்ட சில குறைபாடுகளை சரிசெய்வதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அவர் வலைப்பயிற்சியில் செயல்படும் விதம் பார்க்க நன்றாக தான் இருக்கிறது. 20 ஓவர் போட்டியில் அவர் அப்படி ஒன்றும் மோசமாக ஆடவில்லை.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் நாங்கள் என்ன சொன்னோமோ? அதனை அவர் செய்தார்.

ஒருநாள் போட்டியில் மயங்க் அகர்வால் அறிமுக வீரராக இடம் பிடிப்பாரா? என்று கேட்கிறீர்கள். பல வருடங்களாக உள்ளூர் போட்டியில் மயங்க் அகர்வால் நன்றாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் அணியில் இடம் பிடித்த மயங்க் அகர்வால் அதில் அசத்தினார். இந்த ஆண்டில் நடந்த விஜய் ஹசாரே போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இடம் பிடித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இலக்கை விரட்டி பிடிப்பதில் உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக இந்தியா திகழ்கிறது. சேசிங் செய்யும் போது தெளிவாக திட்டமிட்டு அதற்கு தகுந்தபடி செயல்பட முடியும். ஆனால் முதலில் பேட்டிங் செய்யும் போது வேறுவிதமாக விளையாட வேண்டி உள்ளது. முதலில் பேட்டிங் செய்கையில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் நாம் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன் குவித்தோம். முதலில் பேட்டிங் செய்யும்போது, அதுபோல் ரன் குவிக்க வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story