2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்


2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:11 AM GMT (Updated: 18 Dec 2019 11:11 AM GMT)

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

விசாகப்பட்டினம், 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடிய இரு வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 28-வது சதம்  இதுவாகும்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மறுமுனையில் அபாரமாக ஆடி வந்த  கே.எல்.ராகுலும் சதம் அடித்தார். ராகுல் அடித்த 3-வது சதம் இதுவாகும். 37-வது ஓவரில் இந்திய அணி 227 ரன்கள் சேர்த்து இருந்தபோது, இந்த ஜோடி பிரிந்தது. 102 ரன்கள் அடித்திருந்த நிலையில், கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
 
3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோலி ரன் எதுவும் இன்றி  ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

Next Story