ஐ.பி.எல். போட்டியில் 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு


ஐ.பி.எல். போட்டியில் 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 19 Dec 2019 11:15 PM GMT (Updated: 19 Dec 2019 8:49 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் விலை போய் இருக்கிறார்கள்.

அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பிடித்து இருந்தனர். இதில் 3 வீரர்கள் ஏலத்தில் விலை போய் இருக்கிறார்கள். கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இந்த முறை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கூக்ளி, கேரம் உள்பட 7 விதமாக சுழற்பந்து ஜாலம் நிகழ்த்தக்கூடிய சென்னையை சேர்ந்த 28 வயதான வருண் சக்ரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே அவரை வாங்க நடந்த போட்டியில் கடைசியாக கொல்கத்தா அணி ரூ.4 கோடிக்கு சொந்தமாக்கியது. கடந்த சீசனில் அவர் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளரான எம்.சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயதான சித்தார்த் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்னொரு தமிழக வீரரான சாய் கிஷோரை 2-வது முறையாக விடப்பட்ட ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தனதாக்கியது. சென்னையை சேர்ந்த 23 வயது சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இந்த சீசனில் நடந்த சையது முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (20 விக்கெட்) வீழ்த்தியவர் ஆவார். சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். எஞ்சிய 8 தமிழக வீரர்களுக்கு ஏலத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

Next Story