ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’


ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 28 Dec 2019 11:13 PM GMT (Updated: 28 Dec 2019 11:13 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்-மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு- மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (‘பி’ பிரிவு) இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தமிழகம் 149 ரன்களும், மத்திய பிரதேசம் 333 ரன்களும் எடுத்தன. 184 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தமிழக வீரர்கள் நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர். கவுசிக் காந்தி 154 ரன்களும் (340 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்), கே.முகுந்த் 52 ரன்களும், கேப்டன் பாபா அபராஜித் 39 ரன்களும் விளாசினர்.

தமிழக அணி 2-வது இன்னிங்சில் 131.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்திருந்த போது இந்த போட்டி ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மத்திய பிரதேசத்துக்கு 3 புள்ளியும், தமிழக அணிக்கு ஒரு புள்ளியும் கிடைத்தன.

ராஜ்கோட்டில் நடந்த (‘பி’ பிரிவு) ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 72 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவுக்கு அதிர்ச்சி அளித்தது. முதல் இன்னிங்சில் அரைசதம் (57 ரன்) அடித்த சவுராஷ்டிரா அனுபவ வீரர் புஜாரா 2-வது இன்னிங்சில் 3 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றம் அளித்தார். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உத்தரபிரதேச கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான சவுரப் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டெல்லியில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் (‘ஏ’ பிரிவு) 84 ரன்கள் இலக்கை டெல்லி அணி 27.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் ‘பிளேட்’ பிரிவில் புதுச்சேரி அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மிசோரம் அணியை பந்தாடியது.

புதுச்சேரி வேகப்பந்து வீச்சாளார் கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயதான வினய்குமார், மிசோரமுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 6 விக்கெட் கைப்பற்றினார். இதையும் சேர்த்து ரஞ்சியில் அவரது விக்கெட் எண்ணிக்கை 412 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். ராஜஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ்சிங் 409 விக்கெட் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் வினய்குமார் 7-வது இடத்தில் உள்ளார். ரஞ்சியில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக அரியானா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரஜிந்தர் கோயல் (637 விக்கெட்) விளங்குகிறார்.


Next Story