இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 6 Jan 2020 11:30 PM GMT (Updated: 6 Jan 2020 7:32 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுன், 

தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 269 ரன்னும், தென்ஆப்பிரிக்க அணி 223 ரன்னும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து இருந்தது. 

டாம் சிப்லி 85 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர். நிலைத்து நின்று ஆடிய டாம் சிப்லி 269 பந்துகளில் சதத்தை எட்டினார். 4-வது டெஸ்டில் ஆடும் டாம் சிப்லி அடித்த முதல் சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் பந்து வீச்சில் வான்டெர் துஸ்செனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் சிப்லி 133 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 438 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 34 ரன்னிலும், சுபாய் ஹம்சா 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பீட்டர் மாலன் 63 ரன்னுடனும், கேசவ் மகராஜ் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Next Story