தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு


தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2020 12:52 AM GMT (Updated: 13 Jan 2020 12:52 AM GMT)

சென்னையில் நடந்து வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி 488 ரன்கள் குவித்தது.

சென்னை,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த மும்பை அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. 129 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை அணி ஷம்ஸ் முலானி (87 ரன்), கேப்டன் ஆதித்ய தாரே (67 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் கேப்டன் ஆதித்ய தாரே தனது 9-வது முதல்தர போட்டி சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு ஷஷாங் அட்டார்தே (58 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தார். தமிழக அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் இருந்த போதிலும் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அபாரமாக ஆடிய ஆதித்ய தாரே 154 ரன்கள் (19 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்து ஆட்டம் இழந்தார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 148.4 ஓவர்களில் 488 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. துஷார் தேஷ்பாண்டே 39 ரன்களுடன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தமிழகம் தரப்பில் சாய்கிஷோர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், டி.நடராஜன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை பொறுமையாக ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 52 ரன்களுடனும் (102 பந்து, 7 பவுண்டரி), சூர்யபிரகாஷ் 11 ரன்னுடனும் (85 பந்து) களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

ராஜ்கோட்டில் நடக்கும் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 2-வது நாளிலும் ஆதிக்கம் செலுத்திய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 581 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

புஜாரா 248 ரன்களும் (24 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷெல்டன் ஜாக்சன் 161 ரன்களும் (7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்துள்ளது.

நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) 2-வது இன்னிங்சில் பெங்கால் அணியை வெறும் 99 ரன்னில் சுருட்டிய நடப்பு சாம்பியன் விதர்பா அணி அதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 58 ரன்கள் இலக்கை 13.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது நாளிலேயே வெற்றி பெற்றது.

புதுச்சேரியில் நடக்கும் கோவாவுக்கு எதிரான (பிளேட் பிரிவு) ஆட்டத்தில் புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பராஸ் டோக்ரா 194 ரன்கள் (209 பந்து, 18 பவுண்டரி, 11 சிக்சர்) நொறுக்கிய போதிலும், கோவாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை (270 ரன்) தாண்ட முடியவில்லை.

Next Story