ஸ்டீவன் சுமித்தை விட விராட்கோலி சிறந்த வீரர் - கவுதம் கம்பீர்


ஸ்டீவன் சுமித்தை விட விராட்கோலி சிறந்த வீரர் - கவுதம் கம்பீர்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:06 PM GMT (Updated: 13 Jan 2020 11:06 PM GMT)

ஸ்டீவன் சுமித்தை விட இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சிறந்த வீரர் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.


* புரோ ஆக்கி லீக் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் 2 ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாத சிங்லென்சனா சிங் மற்றும் சுமித் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

* 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 29-ந் தேதி தொடங்குகிறது. கடந்த மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் 48 வயதான பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. அபுதாபியில் நடந்த 10 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் பிரவின் தாம்பே ஆடியதால் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரும் அடங்கும். இந்த தொடரில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி மும்பையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் எந்த மைதானத்திலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட நாங்கள் தயார்’ என்று தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிராக முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி அந்த ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது நினைவுகூரத்தக்கது.

* முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியை எட்டாததால் நியூசிலாந்து பயணத்துக்கான இந்திய ‘ஏ’ அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மும்பையில் நேற்று இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்தை விட இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சிறந்த வீரர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் ஆகியோருக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பந்து வீசுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இருவரும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். கடந்த உலக கோப்பை அரை இறுதியில் முகமது ஷமியை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவாகும்’ என்று தெரிவித்தார்.

* இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் இன்று முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இருவரும் முதல் தடையை கடந்தால் 2-வது சுற்றில் சந்திக்க வேண்டிய வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது.


Next Story