கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது


கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:02 PM GMT (Updated: 19 Jan 2020 11:50 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பெங்களூரு,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல்- இரவு ஆட்டமாக நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய முன்னாள் வீரர் பாபு நட்கர்னியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நமது வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்தபடி பீல்டிங் செய்ய களம் கண்டனர்.

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் தொடங்கினர். தடுமாற்றத்துடன் ஆரம்பித்த அதிரடி சூறாவளி வார்னர் (3 ரன்) முகமது ஷமி ஆப்-சைடுக்கு சற்று வெளியே வீசிய பந்தை அடித்த போது விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். 2-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். சிறிது நேரத்தில் ஸ்டீவன் சுமித்தின் தவறால் பிஞ்ச் (19 ரன்) விக்கெட்டை தாரைவார்க்க நேர்ந்தது. பந்தை அருகில் தட்டிவிட்ட சுமித் சில அடி தூரம் ஓடி விட்டு பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற பிஞ்ச் பேட்டிங் முனைக்கு வந்து விட்டார். இதனால் ரன்-அவுட்டில் வீழ்ந்த பிஞ்ச், கோபத்துடன் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து சுமித்தும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து நிமிர வைத்ததுடன், ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர். ரன்ரேட் 6-ஐ நெருங்கியது. அணிக்கு வலுவூட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 173 ரன்களை எட்டிய போது பிரிந்தது. லபுஸ்சேன் (54 ரன், 64 பந்து, 5 பவுண்டரி) அடித்த ஷாட்டை கோலி பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார்.

இதன் பின்னர் ஒரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் ஸ்டீவன் சுமித் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடி தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு வேகத்தை கூட்டிய சுமித், நவ்தீப் சைனியின் ஓவரில் பவுண்டரி, சிக்சர், பும்ராவின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விரட்டியடித்தார். அவர் ஆடிய விதத்தை பார்த்த போது, அந்த அணி 300 ரன்களை தொடுவது போல் சென்றது. ஆனால் 48-வது ஓவரின் முதல் பந்தை சுமித் (131 ரன், 132 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆகிப் போனார். சுமித் நடையை கட்டியதும் இறுதிகட்ட ரன்வேகத்தை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய பவுலர்கள் 63 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். அதே சமயம் எக்ஸ்டிரா வகையில் 13 வைடு உள்பட 27 ரன்களை வாரி வழங்கினர். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் இன்னும் குறைந்திருக்கும். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 287 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தவான் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து களம் புகுந்தார். நல்ல தொடக்கம் அமைத்து தந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் (12.3 ஓவர்) எடுத்து பிரிந்தது. ராகுல் (19 ரன்), ஆஷ்டன் அகரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. அவர்கள் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை அணுகியதை தொடர்ந்து, தீர்ப்பு மாற்றப்பட்டது.



 

பின்னர் கேப்டன் விராட் கோலி நுழைந்தார். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரோகித் சர்மா தனக்கே உரிய பாணியில் மட்டையை சுழட்டினார். அபாயகரமான பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்சின் ஓவர்களில் சர்வசாதாரணமாக சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகரின் பந்து வீச்சு ஓரளவு எடுபட்டாலும் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கியது. 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்தியாவின் வீறுநடையை தடுக்க முடியவில்லை.

ஏதுவான பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோகித் சர்மா தனது 29-வது சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது 8-வது சதமாக இது பதிவானது. அணியின் ஸ்கோர் 206 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் சர்மா 119 ரன்களில் (128 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கி, அதிரடி காட்டினார்.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டு ரன்களை திரட்டிய விராட் கோலி (89 ரன், 91 பந்து, 8 பவுண்டரி) வெற்றியை நெருங்கிய சமயத்தில், ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னுடனும் (35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனிஷ் பாண்டே 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதையும், விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இருந்தது. அந்த தோல்விக்கு இப்போது இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.

டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி

* இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 89 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்) அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார். கோலி கேப்டனாக இதுவரை 199 இன்னிங்சில் பேட்டிங் செய்து 11,208 ரன்கள் குவித்துள்ளார். டோனி 330 இன்னிங்சில் 11,207 ரன்கள் எடுத்துள்ளார்.

* கோலி 14 ரன் எடுத்த போது, கேப்டனாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இந்த இலக்கை கோலி 82 ஆட்டங்களில் எடுத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் அடுத்த இடங்களில் இந்தியாவின் டோனி (127 ஆட்டம்), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (131 ஆட்டம்) ஆகியோர் உள்ளனர்.

* 29-வது சதத்தை நிறைவு செய்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா, ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 3 இடங்களில் தெண்டுல்கர் (49 சதம்), விராட்கோலி (43), ரிக்கிபாண்டிங் (30) ஆகியோர் உள்ளனர்.

* ரோகித் சர்மா 4 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 3-வது வீரர் (முதல் 2 இடத்தில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்ளனர்) என்ற பெருமையை அவர் பெற்றார். ரோகித் சர்மா இதுவரை 217 இன்னிங்சில் ஆடி 9,115 ரன்கள் சேர்த்துள்ளார்.




 


இந்திய வீரர் ஷிகர் தவான் மீண்டும் காயம்

பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்தார். பீல்டிங் சமயத்தில், 5-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை பாய்ந்து தடுத்த போது தவானின் இடதுகை தரையில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் இடது தோள்பட்டையில் காயமடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தோள்பட்டையோடு சேர்த்து கட்டு போடப்பட்டது. இதனால் அவரால் பேட்டிங் செய்ய இயலவில்லை. வேறு வழியின்றி கையில் கட்டுடன் கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

ஏற்கனவே முந்தைய ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் இடது விலா பகுதியில் காயமடைந்தார். அந்த காயம் பெரிய அளவில் இல்லாத நிலையில் இப்போது மீண்டும் காயத்தில் சிக்கியிருக்கிறார்.

இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு புறப்படுகிறது. அங்கு இந்திய அணி முதலில் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தவானும் இடம் பெற்றுள்ள நிலையில், அவர் நியூசிலாந்து தொடரில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

‘ராகுல் கீப்பராக தொடருவார்’ - இந்திய கேப்டன் கோலி

“நாங்கள் நன்றாக விளையாடுகிறோம். அணியை மாற்றம் செய்யாமல் அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சரியான கலவையில் அமைந்துள்ள அணியில் ஏன் மாற்றம் செய்ய வேண்டும். லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பதன் மூலம் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று”



Next Story