ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: யுவராஜ்சிங், வாசிம் அக்ரம் பங்கேற்பு


ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: யுவராஜ்சிங், வாசிம் அக்ரம் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 11:35 PM GMT (Updated: 26 Jan 2020 11:35 PM GMT)

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டியில், யுவராஜ்சிங், வாசிம் அக்ரம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


* கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனாவில் வருகிற 4-ந்தேதி தொடங்க இருந்த பெட் கோப்பை டென்னிஸ் போட்டி கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் டென்னிஸ் அணியும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் போது, எப்படி சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்ற சூட்சுமத்தை இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்வதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்டுவதற்காக வருகிற 8-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோர் பங்கேற்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) சந்திக்கிறது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கடந்த 12-ந்தேதி நடந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் அன்டோனியா லோப்ஸ் ஹபாஸ், கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர் எல்கோ ஸ்சாட்டோரி ஆகியோருக்கு 2 போட்டிகளில் அணியை வழிநடத்த இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தடை விதித்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

* டெல்லியில் இன்று நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில், ஐ.பி.எல். ஆட்டங்களை இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு தொடங்குவது குறித்தும், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு உறுப்பினர்களை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

* 23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (சி பிரிவு) தமிழக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல்-அவுட் அனது. இந்த இலக்கை அரியானா 34 ஓவர்களில் எட்டியது.


Next Story