இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 26 Jan 2020 11:53 PM GMT (Updated: 26 Jan 2020 11:53 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காத இங்கிலாந்து 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் (58 ரன்), டாம் சிப்லி (44 ரன்), சாம் கர்ரன் (35 ரன்), பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் வீழ்ந்தனர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென்ஆப்பிரிக்க அறிமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்காத இலக்கை நோக்கி அந்த அணி இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 310 ரன்களுக்கு மேலான இலக்கை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கே, இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பிலாண்டருக்கு அபராதம்

“தனது கடைசி டெஸ்டில் ஆடும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர், 2-வது இன்னிங்சில் வெறும் 9 பந்து மட்டுமே வீசிய நிலையில் தசைப்பிடிப்பால் ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னதாக 2-வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியதும் கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக பிலாண்டருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக ஐ.சி.சி. விதித்துள்ளது”


Next Story