‘டோனிக்காக காத்திருக்கும் இருக்கை’ - சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்


‘டோனிக்காக காத்திருக்கும் இருக்கை’ - சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்
x
தினத்தந்தி 28 Jan 2020 11:30 PM GMT (Updated: 28 Jan 2020 11:30 PM GMT)

டோனிக்காக இருக்கை ஒன்று காத்திருப்பதாக, சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

ஹாமில்டன்,

இந்திய அணி வீரர்கள் ஆக்லாந்தில் இருந்து ஹாமில்டனுக்கு பேருந்தில் செல்லும் போது சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், சக வீரர்களிடம் ஜாலியாக பேட்டி கண்டார். பும்ரா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரிடம் நியூசிலாந்து பயண அனுபவங்கள் குறித்து கேட்டறிந்த அவர் இறுதியாக பஸ்சின் கடைசி இருக்கைக்கு சென்றார். கடைசி வரிசையில் ஜன்னல் ஓரம் காலியாக இருந்த இருக்கையை சுட்டி காட்டி, ‘இந்த இருக்கை எப்போதும் ஒரு ஜாம்பவானுக்காக ஒதுக்கப்படும். அந்த ஜாம்பவான் வேறு யாருமில்லை, டோனி தான். டோனிக்குரிய ஜன்னல் ஓர இருக்கையில் இப்போது நாங்கள் யாரும் அமர்வதில்லை. அவரை நாங்கள் மிகவும் தவற விடுவதாக உணர்கிறோம்’ என்று உருக்கமாக தெரிவித்தார். இந்த வீடியோ காட்சி இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

38 வயதான டோனி கடந்த 6 மாதங்களாக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் ஆடியிருந்தார்.


Next Story