ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது
x
தினத்தந்தி 7 Feb 2020 12:29 AM GMT (Updated: 7 Feb 2020 12:29 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

போட்செப்ஸ்ட்ரூம்,

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், வங்காளதேச பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினர். பெக்காம் வீலர் கிரீனால் (75 ரன், 83 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோலஸ் லிட்ஸ்டோன் (44 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் முடங்கினர். மொத்தம் 8 ஓவர்களை மெய்டனாக்கியதால் நியூசிலாந்தின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்து போனது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 211 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஷமிம் ஹூசைன், ஹசன் முராத் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்ஜித் ஹசன் (3 ரன்), பர்வேஸ் ஹூசன் (14 ரன்) ஏமாற்றம் அளித்த போதிலும், மிடில் வரிசை வீரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர். மமுதுல் ஹசன் ஜாய் சதம் (100 ரன், 13 பவுண்டரி) அடித்து அசத்தினார். நடப்பு தொடரில் வங்காளதேச வீரரின் முதல் சதம் இதுவாகும். அவருக்கு தவ்ஹித் ஹிரிடாய் (40 ரன்), ஷஹதத் ஹூசைன் (40 ரன், நாட்-அவுட்) பக்கபலமாக இருந்தனர்.

வங்காளதேச அணி 44.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஜூனியர் உலக கோப்பை மட்டுமல்ல, எந்த ஒரு வடிவிலான உலக கோப்பை போட்டியிலும் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனையை வங்காளதேச ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதே மைதானத்தில் 9-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஜூனியர் உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் மகுடத்துக்கு மல்லுகட்டுவது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2000-ம் ஆண்டிலும் (இந்தியா-இலங்கை), 2006-ம் ஆண்டிலும் (இந்தியா-பாகிஸ்தான்) இவ்வாறு நடந்துள்ளது.

வங்காளதேச கேப்டன் அக்பர் அலி கூறுகையில், ‘இது எங்களது முதலாவது இறுதிப்போட்டி. ஆனால் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது. இந்தியா மிகச்சிறந்த அணி. அவர்களை வீழ்த்த எங்களது உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.’ என்றார்.

முன்னதாக நாளை நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில், அரைஇறுதியில் தோற்ற அணிகளான பாகிஸ்தானும், நியூசிலாந்தும் மோத உள்ளன.

Next Story