நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்னில் ஆல்-அவுட் ஷமி, பும்ரா அபார பந்துவீச்சு


நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்னில் ஆல்-அவுட் ஷமி, பும்ரா அபார பந்துவீச்சு
x
தினத்தந்தி 15 Feb 2020 11:01 PM GMT (Updated: 15 Feb 2020 11:01 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

ஹாமில்டன்,

இந்தியா - நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன்பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 38 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், ஹனுமா விஹாரி (101 ரன்), புஜாரா (93 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனதோடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நியூசிலாந்து லெவன் அணியினர் பேட்டிங் செய்தனர். சீதோஷ்ண நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக அபாரமாக பந்து வீசிய முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் அவ்வப்போது பவுன்சர்களை போட்டு திணறடித்தனர். இதனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ரச்சின் ரவிந்திரா (34 ரன்), ஹென்றி ஹூபர் (40 ரன்), டாம் புருஸ் (31 ரன்), கேப்டன் டேரில் மிட்செல் (32 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

சர்வதேச போட்டியில் ஆடியவர்களான டிம் செய்பெர்ட் (9 ரன்), ஜேம்ஸ் நீஷம் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

முடிவில் நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்களில் 5 மெய்டனுடன் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதே போல் பும்ரா 11 ஓவர்களில் 3 மெய்டனுடன் 18 ரன் வழங்கி 2 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 28 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2-வது இன்னிங்சை பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் தொடங்கினர். முதலாவது இன்னிங்சில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த இவர்கள் இந்த இன்னிங்சில் அதிரடி காட்டினர்.

முதலாவது இன்னிங்சில் தங்களது விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலினின் பந்து வீச்சை நையபுடைத்து எடுத்தனர். அவரது ஓவர்களில் மட்டும் இருவரும் தலா ஒரு சிக்சர், 2 பவுண்டரி வீதம் நொறுக்கினர்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்து மொத்தம் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பிரித்வி ஷா 35 ரன்களுடனும் (25 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 23 ரன்னுடனும் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


பும்ராவின் திறமை மீது கேள்வி எழுப்புவதா?- ஷமி கண்டனம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு அவரது பந்து வீச்சு திறமை முன்பு போல் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து மற்றொரு இந்திய பவுலர் முகமது ஷமியிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது, ‘2-4 ஆட்டங்களில் பும்ரா சரியாக ஆடவில்லை என்பதற்காக அவரது திறமை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அவர் இந்திய அணிக்காக எத்தனை ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். அதை ஒதுக்கி விட முடியாது. அவரது திறமை குறித்து நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் சிந்தித்தால், அது அவருக்கு நல்லவிதமாக அமைந்து, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.’ என்றார்.

Next Story