ஐ.பி.எல். அட்டவணை வெளியானது: தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்


ஐ.பி.எல். அட்டவணை வெளியானது: தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
x
தினத்தந்தி 15 Feb 2020 11:32 PM GMT (Updated: 15 Feb 2020 11:32 PM GMT)

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி ஐ.பி.எல். திருவிழா தொடங்குகிறது.

மும்பை,

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சந்தித்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 30-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

6 நாட்களில் அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இரண்டு ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்த முறை இரட்டை ஆட்டங்கள் கிடையாது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. லீக் சுற்று அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம், அணியின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் போட்டி அட்டவணை கசிந்துள்ளது. இறுதிப்போட்டி மே 24-ந்தேதி நடக்கிறது.

Next Story