ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் அணி அரைஇறுதிக்கு தகுதி: கோவாவை ஊதித்தள்ளியது


ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் அணி அரைஇறுதிக்கு தகுதி: கோவாவை ஊதித்தள்ளியது
x
தினத்தந்தி 23 Feb 2020 11:37 PM GMT (Updated: 23 Feb 2020 11:37 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் அணி, கோவா அணியை எளிதில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

வல்சாத்,

ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் - கோவா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 602 ரன்களும், கோவா 173 ரன்களும் எடுத்தன. 429 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய குஜராத் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 629 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த கோவா அணி 66.4 ஓவர்களில் 164 ரன்னில் முடங்கியது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய் 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் அர்சான் நாக்வாஸ்வல்லா 4 விக்கெட்டுகளும் அள்ளினர். 464 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த குஜராத், முதல்அணியாக அரைஇறுதியை எட்டியது.

ஒடிசாவுக்கு எதிராக பெங்கால் அணி 443 ரன்கள் முன்னிலையுடனும், ஆந்திராவுக்கு எதிராக சவுராஷ்டிரா அணி 658 ரன்கள் முன்னிலையுடனும் 2-வது இன்னிங்சை விளையாடிக் கொண்டு இருக்கின்றன. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால் பெங்கால், சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதியை எட்டுவது உறுதியாகி விட்டது.

மற்றொரு கால்இறுதியில் ஜம்மு-காஷ்மீர் அணியை முதல் இன்னிங்சில் 192 ரன்களில் கட்டுப்படுத்திய கர்நாடக அணி பின்னர் 14 ரன் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை விளையாடி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story