டெல்லி வன்முறை ; கிரிக்கெட் வீரர்கள் சேவாக், யுவராஜ் கண்டனம்


டெல்லி வன்முறை ; கிரிக்கெட் வீரர்கள் சேவாக், யுவராஜ் கண்டனம்
x
தினத்தந்தி 27 Feb 2020 5:22 AM GMT (Updated: 27 Feb 2020 5:22 AM GMT)

டெல்லி வன்முறை சம்பவத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், யுவராஜ் ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  டெல்லி வன்முறைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சேவாக் ஆகியோரும் டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சேவாக் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ டெல்லியில் நடக்கும் சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை.  அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். எந்த ஒரு காயமும், துன்பமும் யாருக்கேனும் ஏற்பட்டால் அது இந்த நாட்டின் தலைநகர் மீது விழும் கறையாக இருக்கும். அனைவரும் அமைதியை பேண வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். 

யுவராஜ்சிங் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். சூழலை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் மனிதர்கள், எனவே, பரஸ்பரம் நாம் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story