பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:58 PM GMT (Updated: 29 Feb 2020 12:05 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி வீழ்ந்தது.

கான்பெர்ரா,

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து அணியை ஊதித்தள்ளியது.

10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் கான்பெர்ராவில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-தாய்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள், புதுமுக அணியான தாய்லாந்தின் பந்து வீச்சை பின்னியெடுத்தனர். தனது முதலாவது சதத்தை எட்டிய லிசெல் லீ 101 ரன்களும் (60 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்), சுனே லுஸ் 61 ரன்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 194 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

அடுத்து களம் இறங்கிய தாய்லாந்து 19.1 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. காம்சோம்பு (26 ரன்), சுத்திராங் (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. தென்ஆப்பிரிக்காவின் பீல்டிங் மோசமாக இருந்தது. எளிதான 4 கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஹீதர் நைட் (62 ரன், 47 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 116 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றதோடு அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஸ்ருப்சோலே, சுழற்பந்து வீச்சாளர் சாரா கிளென் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஸ்ருப்சோலே 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய (74 ஆட்டம்) 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

இந்தியா-இலங்கை இன்று மோதல்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று தனது கடைசி லீக்கில் இலங்கை அணியை மெல்போர்னில் சந்திக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக) தோல்வியை தழுவிய சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விட்டது. என்றாலும் வெற்றிக் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளனர்.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘நாங்கள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டோம் என்பது தெரியும். ஆனாலும் கடைசி லீக் ஆட்டமும் எங்களுக்கு முக்கியமானது தான். இலங்கை அணியை சாதாரணமாக கருதமாட்டோம். அவர்கள் இரண்டு ஆட்டங்களிலும் நெருங்கி வந்தே தோற்று இருக்கிறார்கள். எனவே இலங்கை அணியை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்’ என்றார்.

முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.



Next Story