ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு


ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
x
தினத்தந்தி 2 March 2020 12:28 AM GMT (Updated: 2 March 2020 12:28 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை பெங்களூரு அணி வீழ்த்தியது.

பெங்களூரு,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று பெங்களூருவில் நேற்றிரவு அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 17-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸ் பந்தை வலைக்குள் அனுப்பினார். ஆனால் சக வீரரிடம் இருந்து அவர் பந்தை பெற்ற போது கையால் கையாண்டது தெரியவந்ததால், இதை கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். எதிரணி கொடுத்த நெருக்கடிக்கு மத்தியில் 31-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் டேஷோர்ன் பிரவுன் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். பந்து அதிகமான நேரம் (59 சதவீதம்) கொல்கத்தா வசம் சுற்றி வந்தாலும், ஷாட் அடிப்பதில் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது. 80-வது நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு உருவானது. ஆனால் அவர் அடித்த பந்து, கம்பத்திற்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. 84-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணாவை கோல் பகுதியில் வைத்து பனியனை பிடித்து இழுத்து தள்ளிவிட்ட பெங்களூரு வீரர் நிஷூ குமார் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஒரு வீரர் குறைந்த நிலையில் கடைசி கட்டத்தில் பெங்களூரு சமாளித்துக் கொண்டது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

வருகிற 8-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கும் அரைஇறுதியின் 2-வது சுற்றில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோதும். இதில் டிரா செய்தாலே பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம். அதே சமயம் கொல்கத்தா அணி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.


Next Story