ஹபீசுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்


ஹபீசுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்
x
தினத்தந்தி 22 March 2020 11:00 PM GMT (Updated: 22 March 2020 8:25 PM GMT)

முகமது ஹபீசுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கராச்சி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷர்ஜூல்கான் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஸ்பாட்பிக்சிங்’ என்ற சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டு தடை விதித்தது. பிறகு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் தடை காலம் 2½ ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தடை முடிந்து சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். 30 வயதான ஷர்ஜூல்கான் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், 25 ஒரு நாள் போட்டி மற்றும் 15 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். இப்போது அவருக்கு மறுபடியும் தேசிய அணியில் இடம் கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரருக்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்கும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பாகிஸ்தான் மூத்த வீரர் முகமது ஹபீஸ் டுவிட்டரில் கடுமையாக சாடினார்.

இந்த நிலையில் ஹபீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி வாசிம் கான், ‘தற்போது பாகிஸ்தான் அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கும் வீரர்கள் மற்ற வீரர்கள் பற்றி சமூக வலைத்தளம் மூலம் விமர்சிப்பதோ அல்லது கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகள் குறித்து பேசுவதோ கூடாது. கிரிக்கெட் பற்றி பொதுவான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் குறித்து எது சரி, எது தவறு என்று சொல்லக்கூடாது. அதை கிரிக்கெட் வாரியம் பார்த்து கொள்ளும். முகமது ஹபீஸ் மற்ற வீரர்கள் பற்றி தேவையில்லாமல் பேசுவதை விட்டு விட்டு தனது ஆட்டம் மீது கவனம் செலுத்த வேண்டும். அவரிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசுவேன்’ என்றார்.

Next Story