ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? -கங்குலி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? -கங்குலி
x
தினத்தந்தி 25 March 2020 12:23 AM GMT (Updated: 25 March 2020 12:23 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? என்பது குறித்து சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஐ.பி.எல்.லை தள்ளிவைப்பதாக அன்று அறிவித்த அதே இடத்தில் தான் இப்போதும் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எந்த மாற்றமும் இல்லை. 

எனவே இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டி நடக்குமா என்பதற்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. 3 அல்லது 4 மாதங்கள் கழித்து போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வேன். ஏனெனில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை மாற்ற முடியாது. 

இது மாதிரியான நிலைமையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை’ என்றார். இதற்கிடையே கொல்கத்தாவில் வெறிச்சோடி கிடக்கும் சாலைகளின் படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்குலி ‘எனது நகரம் இப்படியொரு நிலைமையில் இருப்பதை பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story