பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்


பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 March 2020 12:26 AM GMT (Updated: 26 March 2020 12:26 AM GMT)

கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம், பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் கூறியுள்ளனர்.

புதுடெல்லி, 

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். 21 நாட்களுக்கு வீட்டிலேயே இருங்கள், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இது மட்டுமே கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒரே தீர்வு என்று நாட்டு மக்களை அவர் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமரின் அறிவிப்புக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எளிமையான விஷயங்களை செய்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் அதற்கு நிலையான ஒழுக்கமும், மன உறுதியும் தேவையானதாகும். 21 நாட்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சின்ன விஷயம் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமரின் அறிவுரைபடி 21 நாட்களுக்கு எல்லோரும் தயவு செய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகல் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி’ என்று கூறியுள்ளார். மேலும் விராட்கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘இது நமக்கு சோதனையான காலக்கட்டம். சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. நமக்கு வழங்கப்பட்ட அறிவுரையை அனைவரும் பின்பற்றுங்கள். ஒற்றுமையாக இருப்போம். எல்லோருக்கும் நாங்கள் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் இது தான்’ என்று கூறியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Next Story