20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று தள்ளிவைப்பு


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 27 March 2020 12:49 AM GMT (Updated: 27 March 2020 12:49 AM GMT)

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

துபாய், 

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் அரங்கேறுகிறது. இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

8-வது உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றின் ஒரு பகுதி ஆட்டங்கள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போவதால் இந்த தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.

போட்டிகளுக் கான ஐ.சி.சி. நிர்வாகி கிறிஸ் டெட்லி கூறுகையில், ‘உலகளாவிய கொரோனா பாதிப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளும் விதித்துள்ள கட்டுப்பாடுகள் இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து ஐ.சி.சி. தள்ளிவைப்பு முடிவை எடுத்துள்ளது. எல்லாவற்றையும் விட வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் உடல் ஆரோக்கியமும், பாதுகாப்புமே எங்களுக்கு முதன்மையானது’ என்றார்.

ஐ.சி.சி.யின் அறிவிப்பின்படி ஏப்ரல் 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை குவைத்தில் நடக்க இருந்த ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்று (ஏ பிரிவு), ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் நடக்க இருந்த ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று, ஸ்பெயினில் மே 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்க இருந்த ஐரோப்பிய மண்டலத்திற்கான (ஏ பிரிவு) தகுதி சுற்று மற்றும் மலேசியா, பின்லாந்து ஆகிய நாடுகளில் நடக்க இருந்த போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமையை ஆராய்ந்து தகுதி சுற்று போட்டி எப்போது நடத்தப்படும் என்பதை ஐ.சி.சி. அறிவிக்கும். மேலும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஸ்காட்லாந்து, உகாண்டாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள உலக கோப்பை கிரிக்கெட் லீக், உலக கோப்பை சேலஞ்ச் லீக் ஆகிய போட்டிகள் தங்களது கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும், சூழ்நிலைக்குத் தக்கப்படி அந்த போட்டி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story