ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா? மும்பையா? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா? மும்பையா? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து
x
தினத்தந்தி 7 April 2020 12:35 AM GMT (Updated: 7 April 2020 12:35 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் சிறந்தது எது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்க இருந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க இருந்தது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளி வைக்கப்படுவதாகவும், அதன் பிறகு நிலவும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவது பெருத்த கேள்விக்குறியாகவே இருக்கிறது. இருப்பினும் சகஜ நிலை திரும்பி இந்த போட்டி அரங்கேறும் என்று வீரர்களும், ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிகரமான அணிகளாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் சிறந்தது எது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘கடந்த 12 வருடங்களாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு அணியை மதிப்பிடுவதற்கு அதன் வெற்றி சதவீதத்தை பார்ப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். அந்த வகையில் அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பட்டியலில் வேகமாக முன்னேறி இருப்பதுடன், அதிகமாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைவான ஐ.பி.எல். போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணி வளர்ந்து வரும் விதத்தை பார்க்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்சை விட, மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணியாக விளங்குவதுடன், இறுதிப்போட்டியில் அந்த அணியை அதிக முறை வீழ்த்தி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாலும் பெரும்பாலும் வெற்றியை தனதாக்கி விடுகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த அளவுக்கு வெற்றியை பெறுவதில்லை. ஒட்டு மொத்த ஐ.பி.எல். போட்டியை வைத்து பார்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலங்களில் பார்த்தால் சென்னை அணியை விட, மும்பை இந்தியன்ஸ் சற்று முன்னிலையில் உள்ளது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை தனதாக்கியது. தடை காரணமாக 2016, மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அந்த அணி இந்த போட்டியில் விளையாடவில்லை. சென்னை அணி மொத்தம் 165 போட்டிகளில் விளையாடி 100 வெற்றி, 64 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் மகுடம் சூடி, ஐ.பி.எல். கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமையை தன்வசப்படுத்தியது. 187 போட்டிகளில் விளையாடி இருக்கும் அந்த அணி 109 வெற்றி, 78 தோல்வி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை (2013, 2015, 2019) சென்னையை வீழ்த்தி இருக்கிறது. மற்றொரு முறை புனே அணியை (2017) சாய்த்து இருந்தது. ஐ.பி.எல். போட்டி தொடரில் மும்பை-சென்னை அணிகள் 28 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 17 முறையும், சென்னை அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. இந்த போட்டி தொடரில் சென்னை அணி, மும்பையிடம் தான் அதிக முறை தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story