ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு?


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு?
x
தினத்தந்தி 15 April 2020 12:14 AM GMT (Updated: 15 April 2020 12:14 AM GMT)

மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, 

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை (அதாவது இன்று வரை) தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டினருக்கான விசா நிறுத்தி வைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாட முடியாது. மத்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிலைப்பாட்டை பொறுத்து ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகி வருவதால் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனால் இன்னும் 18 நாட்கள் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அனேகமாக ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். ஒரு வேளை அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்தும் யோசனையும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உள்ளது.

Next Story