ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு
x
தினத்தந்தி 18 April 2020 11:30 PM GMT (Updated: 18 April 2020 8:10 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளிலேயே சிறந்த வீரர்கள், கேப்டன்கள் யார் என்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், வர்ணனையாளர்கள் என்று 50 பேருடன் அலசி ஆராய்ந்தது. அவர்கள் அளித்த ஓட்டு அடிப்படையில் ஐ.பி.எல்.லின் சிறந்த கேப்டன்களாக டோனியும் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரோகித் சர்மாவும் (மும்பை இந்தியன்ஸ்) தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னை அணியை எல்லா தடவையும் பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ள டோனி மூன்று முறை கோப்பையையும் வென்றுத் தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை கைப்பற்றித்தந்த சிறப்புக்குரியவர் ஆவார்.

சிறந்த பேட்ஸ்மேனாக டிவில்லியர்சும் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), சிறந்த பந்து வீச்சாளராக மலிங்காவும் (மும்பை இந்தியன்ஸ்), சிறந்த ஆல்- ரவுண்டராக ஷேன் வாட்சனும் (சென்னை) தேர்வாகியுள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான விராட் கோலி (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

Next Story