பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்னாள் கேப்டன் சனா மிர் ஒய்வு


பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்னாள் கேப்டன் சனா மிர் ஒய்வு
x
தினத்தந்தி 25 April 2020 11:00 PM GMT (Updated: 25 April 2020 6:55 PM GMT)

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.


* இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தனது 16 வயதில் அறிமுகம் ஆனார். அந்த டெஸ்டில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிசின் அதிவேக பந்து வீச்சு அவரை பதம் பார்த்தது. இதனால் மிரண்டு போன தெண்டுல்கர் இதுவே தனது முதலும், கடைசியுமான டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று அப்போது எண்ணியதாக நினைவு கூர்ந்துள்ளார். அந்த சமயத்தில் சக வீரர் ரவிசாஸ்திரி களத்தில் அரைமணி நேரம் தாக்குப்பிடித்து விளையாடு, அதன்பிறகு எளிதில் சமாளித்து விடலாம் என்று கூறினார். அவரது அறிவுரைபடி விளையாடி அடுத்த டெஸ்டில் அரைசதம் அடித்தேன். அதன் பிறகு எல்லாமே மாறி விட்டது என்றும் குறிப்பிட்டார்.

* பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 34 வயதான சனா மிர் இதுவரை 120 ஒருநாள் போட்டியில் விளையாடி 1,630 ரன்களும், 151 விக்கெட்டுகளும் எடுத்து உள்ளார். அதேபோல் 106 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 802 ரன்னும், 89 விக்கெட்களும் எடுத்து இருக்கிறார். இதில் அவர் 75 ஒருநாள் மற்றும் 65 இருபது ஓவர் போட்டிகளுக்கு பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் நுழைய ஆஸ்திரேலிய அரசு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும் இந்த ஆண்டின் இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் சில விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரிக்கெட் தொடர் நடக்காமல் போனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,400 கோடி இழப்பு ஏற்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் பயணம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசும் சாதகமான பதிலை அளித்துள்ளதாக தெரிகிறது.

* இந்திய முன்னாள் வில்வித்தை வீரர் 48 வயதான லிம்பா ராம், நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு ஆணையம் செய்தது. ஊரடங்கு காரணமாக சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் லிம்பா ராம் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து அவருக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய வில்வித்தை சங்கம் முன்வந்துள்ளது. அத்துடன் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது. உலக வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான லிம்பா ராம் 1992-ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story