20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும்: இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்


20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும்: இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்
x
தினத்தந்தி 4 May 2020 11:00 PM GMT (Updated: 4 May 2020 9:18 PM GMT)

அணிகள் தயாராக காலஅவகாசம் கிடைக்காவிட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் தெரிவித்துள்ளார்.

லண்டன், 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஜாசன் ராய் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள் தயாராக போதிய கால அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டால் அந்த போட்டியை தள்ளிவைப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையை கடந்து போட்டி அரங்கேறினால் விளையாடுவது தான் வீரர்களின் பணியாகும். 3 வார காலத்துக்குள் தயாராகி போட்டியில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டாலும், விளையாடுவதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். மீண்டும் எப்போது போட்டி நடைபெறும்?, பயிற்சிக்கு எப்போது செல்லலாம் என்று தான் எல்லா வீரர்களும் காத்து இருக்கிறார்கள். கிரிக்கெட் பந்தை அடித்து விளையாடுவது எப்போது? என்ற ஆவலுடன் இருக்கிறேன். தேவைப்பட்டால் ரசிகர்கள் அனுமதி இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி நடத்தப்பட்டாலும் விளையாட தயாராக உள்ளேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பாதுகாப்புடன் போட்டிகள் மீண்டும் நடைபெற விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று தெரிவித்தார்.

Next Story