ஐ.சி.சி.க்கு, ஷகிப் அல்-ஹசன் கோரிக்கை


ஐ.சி.சி.க்கு, ஷகிப் அல்-ஹசன் கோரிக்கை
x
தினத்தந்தி 24 May 2020 11:30 PM GMT (Updated: 24 May 2020 11:30 PM GMT)

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்-ஹசன் ஐ.சி.சி.க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

துபாய், 

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது வீரர்களும், நடுவர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக வீரர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி (5 அடி) இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சில சந்தேகங்களை கிளப்பி வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளக்கம் கேட்டுள்ளார்.

‘3 அல்லது 5 அடி இடைவெளி அல்ல, 12 அடி தூரம் வரை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக இப்போது நாங்கள் கேள்விப்படுகிறோம். அப்படி என்றால் ஒரு ஓவர் முடிந்ததும் களத்தில் நிற்கும் இரண்டு பேட்ஸ்மேன்களும் நெருங்கி வந்து சந்திக்கக்கூடாது அல்லவா? அவர்கள் தங்களது பேட்டிங் முனையிலேயே நின்று விடலாமா? பேட்ஸ்மேனில் இருந்து விக்கெட் கீப்பர் எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும்? அருகருகே நிற்கும் பீல்டர்களின் நிலைமை? இது போன்ற விஷயங்கள் குறித்து ஐ.சி.சி. விவாதிக்க வேண்டியது அவசியமாகும். பாதுகாப்பு தான் முதலில் முக்கியம்.

கொரோனா பாதிப்பு நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகே மறுபடியும் கிரிக்கெட் போட்டி தொடங்குவது குறித்து ஐ.சி.சி. முடிவு செய்யும்’ என்று ஷகிப் அல்-ஹசன் கூறியுள்ளார்.

Next Story