இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு


இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 12:33 AM GMT (Updated: 4 Jun 2020 12:33 AM GMT)

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கிங்ஸ்டன், 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வருகிற 8-ந் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. 9-ந் தேதி மான்செஸ்டரை சென்றடையும் வெஸ்ட்இண்டீஸ் அணி அங்கு தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. 

மருத்துவ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற இருக்கும் இந்த போட்டி தொடர் ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் ஜூலை 8-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஜூலை 16-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஜூலை 24-ந் தேதியும் தொடங்குகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச் உள்பட 14 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 11 மாற்று வீரர்களும் அணியினருடன் செல்கின்றனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால் ஆகிய 3 வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுத்ததால் அவர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை. 

‘இங்கிலாந்து தொடர் குறித்து 3 வீரர்கள் எடுத்து இருக்கும் முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். இந்த முடிவுக்காக வருங்கால அணி தேர்வின் போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் இருக்காது’ என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.


Next Story