2011-ம் ஆண்டு உலக கோப்பை சூதாட்ட புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும்-அரவிந்த டிசில்வா வலியுறுத்தல்


2011-ம் ஆண்டு உலக கோப்பை சூதாட்ட புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும்-அரவிந்த டிசில்வா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jun 2020 9:49 PM GMT (Updated: 22 Jun 2020 9:49 PM GMT)

2011-ம் ஆண்டு உலக கோப்பை சூதாட்ட புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த டிசில்வா வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு, 

2011-ம் ஆண்டு மும்பைவான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ‘இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ எனும் சூதாட்டம் நடந்து இருக்கிறது. இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. 

குறிப்பிட்ட ஒரு குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விளையாட்டு துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டிசில்வா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

எல்லா நேரங்களிலும் பொய் சொல்பவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்று விடக்கூடாது. எனவே இந்த புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகியவை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 தெண்டுல்கர் மற்றும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நலனை முன்னிட்டாவது இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் ‘பிக்சிங்’ செய்யப்பட்ட உலக கோப்பையை தாங்கள் வெல்லவில்லை என்பதை நிரூபிக்க நடுநிலையான விசாரணையை நடத்த முன்வர வேண்டும். இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் நிறைய பேரை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story