ரஞ்சி போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மரணம்


ரஞ்சி போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மரணம்
x
தினத்தந்தி 23 Jun 2020 12:00 AM GMT (Updated: 22 Jun 2020 9:53 PM GMT)

ரஞ்சி போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மரணம் அடைந்தார்.

புதுடெல்லி, 

1958 முதல் 1985-ம் ஆண்டு வரை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப், டெல்லி மற்றும் அரியானா அணிக்காக விளையாடிய ராஜிந்தர் கோயல் (வயது 77) வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 

அரியானாவை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ராஜிந்தர் கோயல் 157 முதல் தர போட்டியில் விளையாடி மொத்தம் 750 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதில் 59 முறை 5 விக்கெட்டும், 18 முறை 10 விக்கெட்டும் சாய்த்ததும் அடங்கும். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (637 விக்கெட்டுகள்) வீழ்த்தியவர் என்ற சிறப்பு அவர் வசமே உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய ராஜிந்தர் கோயல் துரதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்காக விளையாடவில்லை.

அந்த காலகட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் பிஷன்சிங் பெடி தனது இடத்தை வலுவாக தக்கவைத்துக் கொண்டு இருந்ததால் ராஜிந்தர் கோயலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

பிஷன்சிங் பெடி ஒருமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டபோது 1974-ம் ஆண்டில் பெங்களூருவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜிந்தர் கோயலுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் போனது. முதல் தர கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2017-ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதை ராஜிந்தர் கோயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முதல் தர போட்டியில் சளைக்காமல் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய ராஜிந்தர் கோயல் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் வீரர்கள் ஷேவாக், கும்பிளே, ஹர்பஜன்சிங், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பிஷன்சிங் பெடி, வி.வி.எஸ்.லட்சுமண் உள்பட பலரும் சமூகவலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story