செப்டம்பரில் நடக்க இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடர் தள்ளிவைப்பு


செப்டம்பரில் நடக்க இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடர் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 15 July 2020 10:45 PM GMT (Updated: 15 July 2020 9:44 PM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்த ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர் தள்ளிவைக்கப்படுகிறது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சவுதம்டனில் கடந்த வாரம் நடந்த இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.

விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இன்னும் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை தொடங்க முடியாத நிலையில் உள்ளனர். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின், இலங்கை, ஜிம்பாப்வே பயணங்கள் ஏற்கனவே தள்ளிபோடப்பட்டன. அத்துடன் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த 6 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால், அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தி வருகிறது.

இதற்கிடையில், வருகிற செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. தற்போது நமது நாட்டில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில் இந்த போட்டி தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நியூசிலாந்து ‘ஏ’ அணியின் இந்திய வருகையும் திட்டமிட்டபடி நடக்க வழியில்லை என்றும் அவர் கூறினார்.

நாளை நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் வருங்கால போட்டி அட்டவணை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டம் முடிவில் இங்கிலாந்து அணியின் வருகை தள்ளிவைப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த நேரத்தில் தற்போதைய தொடரையும் சேர்த்து நடத்தலாமா? என்பது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

Next Story