ஐ.பி.எல்., உள்ளூர் போட்டிகளை தொடங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை


ஐ.பி.எல்., உள்ளூர் போட்டிகளை தொடங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 16 July 2020 10:45 PM GMT (Updated: 16 July 2020 9:20 PM GMT)

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்கள். 11 விதமான அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய அணிக்குரிய இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகளை வேறுதேதியில் நடத்துவது குறித்தும், இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதே போல் முதல்தர போட்டியான ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளை உள்நாட்டில் எப்போது தொடங்கலாம், அதற்குரிய சாத்தியக்கூறு உள்ளதா? எனவும் விவாதிக்கப்படுகிறது. கொரோனா அச்சத்தால் போதுமான காலஅவகாசம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் இந்த முறை ரஞ்சி போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். உள்ளூர் சீசனை தாமதமாக தொடங்கும் போது விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, முஸ்தாக் அலி ஆகிய போட்டிகளில் ஒன்று நீக்கப்படலாம்.

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது, இந்தியாவில் நிலைமை சீராகாவிட்டால் அதை வெளிநாட்டிற்கு மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி. முறைப்படி தள்ளிவைத்ததும் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான ஆயத்தபணிகளை தொடங்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மத்திய அரசிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தர இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. டிசம்பர் மாதம் வரை கெடு விதித்துள்ளது. அது குறித்தும், இந்திய அணியின் சீருடைக்கான ஸ்பான்சர்ஷிப் பெற்றிருந்த நைக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் புதிதாக டெண்டர் கோருவது குறித்தும், கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகளை தொடங்குவது குறித்தும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

Next Story