‘இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்’ பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை


‘இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும்’ பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 21 July 2020 9:15 PM GMT (Updated: 21 July 2020 8:12 PM GMT)

3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

கராச்சி,

3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ‘ஆன்-லைன்’ மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். ஆனால் இங்கிலாந்தில் தற்போது ஆடுகளத்தின் தன்மை மாறி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதை இவ்வளவு முன்கூட்டியே சொல்ல முடியாது. வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து தொடரை பார்க்கையில் எங்களுக்கு சில யோசனைகள் கிடைத்து இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் எந்த வீரர்களால் நன்றாக செயல்பட முடியும் என்பதற்கு ஏற்ப நாங்கள் தயாராகுவோம். அப்போதைய தட்பவெப்பநிலை உள்பட எல்லா விஷயங்களையும் கவனிப்போம். 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் வாய்ப்பு குறித்தும் சிந்திப்போம். எச்சிலை தேய்த்து பந்தை பளபளப்பாக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமத்தை சந்திப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வியர்வையை பயன்படுத்தி பந்து வீச்சில் குறை சொல்ல முடியாத வகையில் செயல்பட்டனர்.

இந்த தொடரில் நிச்சயம் எங்கள் அணியின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கமாட்டோம். எங்கள் திறமையை பயன்படுத்தி பெருமைப்படும் வகையில் செயல்பட முயற்சிப்போம். உடல் தகுதியை பொறுத்தமட்டில் விராட்கோலி உயர்தரமான வீரர். இந்த விஷயத்தில் எங்கள் அணியினரும் ரொம்ப பின்தங்கியவர்கள் கிடையாது. பாபர் அசாம் நல்ல உடல் தகுதியை உடையவர். அத்துடன் அவர் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். உடல் தகுதியை மேம்படுத்த எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story