ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் பேட்டி


ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 31 July 2020 11:21 PM GMT (Updated: 31 July 2020 11:21 PM GMT)

ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது பற்றி அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் பேட்டியளித்து உள்ளார்.

துபாய்,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி நேற்று அளித்த பேட்டியில், ‘கவுரவமிக்க இந்த போட்டியை எங்கள் நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இங்கு நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் 30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. நாங்களும் அதே சதவீத எண்ணிக்கையை எதிர்பார்க்கிறோம். ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.

அமீரக அரசின் தீவிரமான நடவடிக்கையால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு (தற்போது 6,200 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்) குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து விடும். 14 அணிகள் இடையிலான உலக கோப்பை தகுதி சுற்றை கடந்த ஆண்டு நடத்தினோம். இதே போல் இந்த மெகா தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்’ என்றார்.

Next Story