இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சரிவை சமாளித்தது பாகிஸ்தான் - மழையால் ஆட்டம் பாதிப்பு


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சரிவை சமாளித்தது பாகிஸ்தான் - மழையால் ஆட்டம் பாதிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 6:50 PM GMT (Updated: 5 Aug 2020 6:50 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சரிவை சமாளித்தது பாகிஸ்தான் அணி.

மான்செஸ்டர், 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷா, ஷதப் கான் என்று இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்தனர். பவுலர் கிரீசை தாண்டி காலை வைத்து நோ-பால் வீசினால் அதை 3-வது நடுவர் கண்காணித்து அறிவிக்கும் முறை இந்த போட்டியின் மூலம் முதல்முறையாக டெஸ்டிலும் அறிமுகம் ஆனது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களம் கண்ட பாகிஸ்தான் வீரர்கள் நிதானமாக ஆடினர். அபித் அலி 16 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

இதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஷான் மசூத்தும், துணை கேப்டன் பாபர் அசாமும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை சமாளித்தனர். துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய பாபர் அசாம் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 41.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது பாபர் அசாம் 52 ரன்களுடனும் (71 பந்து, 9 பவுண்டரி), ஷான் மசூத் 45 ரன்களுடனும் (134 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர்.

Next Story