ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஆரோன் பிஞ்ச் பேட்டி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஆரோன் பிஞ்ச் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2020 7:18 PM GMT (Updated: 6 Aug 2020 7:18 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறினார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு அணியுடன் எப்போது இணைவேன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். உலகின் மிகச்சிறந்த வீரர்கள் சிலர் அந்த அணியில் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ளூர் ரசிகர்களின் முன் ஆடியிருந்தால் வியப்புக்குரிய அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டாலும் பெங்களூரு அணிக்காக ஆடுவதே என்னை பொறுத்தவரை பெரிய விஷயம் தான். முதல்முறையாக விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளேன். அதுவே எனக்கு பரவசமூட்டுகிறது. அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் பல ஆண்டுகளாக விளையாடி இருக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் அணியை எப்படி வழிநடத்துவார், சவால் அளிப்பார் என்பதை அறிவேன். அவரது கேப்டன்ஷிப்பை அருகில் இருந்து கவனிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். தொடக்க வீரராக களம் இறங்கி விராட் கோலியின் நெருக்கடியை குறைக்க முடியும் என்றால், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்.

இவ்வாறு பிஞ்ச் கூறினார்.

Next Story