இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்?-பிரெட்லீ கணிப்பு


இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்?-பிரெட்லீ கணிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 10:30 PM GMT (Updated: 10 Aug 2020 8:01 PM GMT)

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்? என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ கணித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான பிரெட்லீ ஸ்டார் ஸ்போட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் சற்று வயது முதிர்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு இருப்பது அந்த அணிக்குரிய பலமாகும். அந்த அணியில் இளம் வீரர்களும் இடம் வகிக்கிறார்கள். 

நிறைய வீரர்கள் அந்த அணியிலேயே நீண்ட காலமாக தக்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அது அவர்களுடைய சிறப்பான பலமாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்து இருக்கும் ஆடுகளங்கள் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பொருத்தமானதாக இருக்கும். போட்டியின் போது அமீரகத்தில் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

அத்துடன் ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பும். எனவே அங்குள்ள ஆடுகளங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளூரில் இருப்பதை விட அதிகமாக சிறப்பான உணர்வை கொடுப்பதாக இருக்கும். அந்த அணியில் உள்ள எல்லா சுழற்பந்து வீச்சாளர்களாலும் பெரிய அளவில் பந்தை திரும்ப வைக்க முடியும். எனவே இந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி தொடங்குகிறது.


Next Story