இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
x
தினத்தந்தி 14 Aug 2020 1:16 AM GMT (Updated: 14 Aug 2020 1:16 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.

சவுதம்டன், 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷதப் கானுக்கு பதிலாக பவாத் ஆலம் சேர்க்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பவாத் ஆலம் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிறார். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு சாம் கர்ரனும், பென் ஸ்டோக்சுக்கு பதிலாக ஜாக் கிராவ்லியும் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. தொடக்க வீரர் ஷான் மசூத் (1 ரன்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி (20 ரன், 85 பந்து) மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வெளியேற்றப்பட்டார். மறுமுனையில் அரைசதத்தை கடந்த மற்றொரு தொடக்க வீரர் அபித் அலி 60 ரன்களில் கேட்ச் ஆனார். இதற்கிடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியது. ஆசாத் ஷபிக் (5 ரன்), பவாத் ஆலம் (0) தாக்குப்பிடிக்கவில்லை.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 126 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்த போது ஆட்டம் மழையால் மறுபடியும் நிறுத்தப்பட்டது. அப்போது பாபர் அசாம் (25 ரன்), முகமது ரிஸ்வான் (4 ரன்) களத்தில் இருந்தனர்.


Next Story