டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்த ஆர்வம் - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தகவல்


டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்த ஆர்வம் - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2020 1:02 AM GMT (Updated: 20 Aug 2020 1:02 AM GMT)

டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்துவதில் ஆர்வமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், மூன்று வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனுமான மகேந்திர சிங் டோனி கடந்த சனிக்கிழமை திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் அவரது ஓய்வு முடிவு சக வீரர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘சாதனை நாயகன்’ 39 வயதான டோனிக்கு வழியனுப்பும் போட்டி ஒன்றை நடத்த வேண்டும், அதை சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி நேற்று கூறுகையில், ‘டோனிக்கு பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இப்போதைக்கு இந்திய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை. ஐ.பி.எல். முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம். இந்திய கிரிக்கெட்டுக்காக டோனி அளப்பரிய பங்களிப்பு அளித்துள்ளார். எல்லாவிதமான மரியாதைகளுக்கும் அவர் தகுதியானவர். ஆனால் டோனி வித்தியாசமான ஒரு வீரர். யாரும் நினைக்காத நேரத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டார். ஐ.பி.எல். போட்டியின் போது அவரிடம் இது பற்றி பேசுவோம். ஒரு ஆட்டத்திலோ அல்லது ஒரு தொடரிலோ பங்கேற்பது குறித்து அவரது கருத்தை அறிய சரியான இடம் அது தான். அவர் ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ? நிச்சயம் அவருக்கு முறைப்படி ஒரு பாராட்டு விழா நடத்தப்படும். அவரை நாங்கள் கவுரவப்படுத்துவோம்’ என்றார்.

இந்திய முன்னாள் வீரர் மதன்லால் கூறுகையில், ‘டோனிக்காக, இந்திய கிரிக்கெட் வாரியம் வழியனுப்பும் போட்டி நடத்தினால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவேன். அவர் ஒரு ஜாம்பவான். இது போன்று சாதாரணமாக போக விடக் கூடாது. அவரை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. அதன் மூலம் ஒவ்வொருவரும் அவரது ஆட்டத்தை டி.வி., செல்போனில் பார்ப்பார்கள். அதுவே அவருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர் ஒன்றை உள்நாட்டில் நடத்தும் போது, ரசிகர்கள் ஸ்டேடியத்தில் அமர்ந்து அவரது ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க முடியும்’ என்றார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவிக்கும் போது, ‘2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி வரை டோனி விளையாடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் அவருக்கு உள்ள ஆதரவையும், ரசிகர்கள் காட்டும் அன்பையும், அங்கீகாரத்தையும் வைத்து தான் இவ்வாறு சொல்கிறேன். இருப்பினும் ஓய்வு அவரது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை 20 ஓவர் உலக கோப்பையில் டோனி பங்கேற்க வேண்டும் என்று அவரை அழைத்து இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கலாம். இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. 1987-ம் ஆண்டு கிரிக்கெட்டை விட்டு விலக இம்ரான்கான் முடிவெடுத்த போது, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல்-ஹக் அவரை தொடர்ந்து விளையாடும்படி கேட்டுக் கொண்டார். அவரும் அதை ஏற்று விளையாடினார். பிரதமர் கோரிக்கை விடுத்தால், முடியாது என்று டோனியால் மறுக்க முடியாது’ என்றார்.

Next Story