ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் பயணம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் பயணம்
x
தினத்தந்தி 21 Aug 2020 12:46 AM GMT (Updated: 21 Aug 2020 12:46 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்படுகிறது.

சென்னை,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஊரடங்கால் பெரும்பாலான வீரர்கள் வீட்டிலேயே முடங்கியதால் அவர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படுவதாலும், கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதாலும் 8 அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களும் 4 வாரத்திற்கு முன்பாகவே அமீரகம் செல்கிறார்கள். இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணி வீரர்கள் நேற்று அமீரகம் புறப்பட்டு சென்று விட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பியுஷ் சாவ்லா, தீபக் சாஹர், கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 நாட்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று தனிவிமானம் மூலம் பிற்பகல் 12.45 மணியளவில் துபாய் புறப்படுகிறார்கள். பயிற்சி முகாமில் இடம் பெறாத மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அமீரகம் புறப்படுவதற்குள் சென்னை வந்து விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து துபாய்க்கு பயணிக்கமாட்டார் என்பது தெரியவந்துள்ளது. 2 வாரத்திற்குள் அவர் துபாய் செல்ல இருக்கிறார்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரும் இன்று தான் துபாய்க்கு கிளம்புகிறார்கள். அந்த அணியைச் சேர்ந்த டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், ஸ்டெயின் ஆகிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாளை துபாயில் கைகோர்த்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அவர்களின் பயணத்திற்கு அனுமதி வழங்கிவிட்டது.

ஐ.பி.எல். அணிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 29 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் தொடர் செப்டம்பர் 16-ந்தேதி முடிவடைந்ததும் 17-ந்தேதி அவர்கள் ஐ.பி.எல். போட்டிக்காக அமீரகம் வந்து விடுவார்கள். கொரோனா தடுப்பு விதிமுறையின்படி 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால், அவர்கள் தங்கள் அணிக்குரிய ஒன்றிரண்டு ஆட்டங்களை தவற விட வேண்டி வரும். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல்.-ல் அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பெங்களூரு அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஏற்கனவே அவர்கள் கொரோனா உயிர் பாதுகாப்பு மருத்துவ வளையத்திற்குள் தங்களை உட்படுத்தி கொண்டு தான் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவார்கள். அங்கு அவர்கள் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து அது திருப்தி அளிக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்துதல் இன்றி உடனடியாக ஐ.பி.எல்.-ல் விளையாட முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் சர்வதேச தொடர் முடிந்தாலும் அவர்கள் சுகாதார விதிமுறைகளை தொடர்ந்து சரியாக பின்பற்ற வேண்டியது அவசியம். விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை நடவடிக்கைகள் இன்றி தனிவிமானத்தில் வருகை தந்து, பொதுமக்கள் யாரையும் சந்திக்காமல் இருக்க வேண்டியது முக்கியம். பயணக்கட்டுப்பாடு நடைமுறைகளை எந்த வீரராவது மீறினால் நிச்சயம் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியின் போது வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர், அணிகளின் உரிமையாளர்கள் உள்பட போட்டிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் அதை மீறக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாராவது தவறிழைத்து அதன் மூலம் மற்றவர்களும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

Next Story