சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி !


சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி !
x

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச்சென்றனர்.

துபாய்,

வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். விமான பயணத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடைபிடித்த எளிமை அவரது ரசிகர்களை வியப்பு அடையச் செய்துள்ளது. 

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஜார்ஜ் என்பவருக்காக தோனி தனது பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்துள்ளார். விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஜார்ஜ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

அதில் "கிரிக்கெட்டில் எல்லா சாதனையும் படைத்த ஒருவர் என்னிடம் வந்து 'உங்கள் கால்கள் மிகவும் நீளமாக இருக்கிறது, நீங்கள் என்னுடைய பிசினஸ் கிளாஸ் இருக்கையில் உட்காருங்கள், நான் எகானமி கிளாஸில் உட்காருகிறேன்' என்று கூறினார். கேப்டன் என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்துவார்"  என பதிவிட்டுள்ளார்.

தோனியின் இந்த எளிமையான செயல் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இது தொடர்பான விடீயோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story