பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் கிராவ்லி இரட்டை சதம் அடித்து சாதனை


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் கிராவ்லி இரட்டை சதம் அடித்து சாதனை
x
தினத்தந்தி 23 Aug 2020 4:49 AM GMT (Updated: 23 Aug 2020 4:49 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

சவுதம்டன், 

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் சதத்தை பூர்த்தி செய்த ஜாக் கிராவ்வி 171 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 87 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜாக் கிராவ்லி, ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். மழை குறுக்கிட்டால் 2 முறை பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இருவரும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். 189 பந்துகளில் ஜோஸ் பட்லர் சதத்தை எட்டினார். முன்னதாக ஜோஸ் பட்லர் 99 ரன்னில் இருக்கையில் முகமது அப்பாஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயல அது விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் வீரர்கள் அப்பீல் செய்ததை தொடர்ந்து நடுவர் அவுட் வழங்கினார். இதனை எதிர்த்து ஜோஸ் பட்லர் டி.ஆர்.எஸ்.முறையில் அப்பீல் செய்தார். அதில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரியவந்ததால் ‘அவுட்’ இல்லை என்று நடுவர் அறித்தார். இதனால் ஜோஸ் பட்லர் கண்டத்தில் இருந்து தப்பியதுடன் தனது 2-வது சதத்தையும் பதிவு செய்தார்.

நிலைத்து நின்று கலக்கிய ஜாக் கிராவ்லி 331 பந்துகளில் இரட்டை சதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இரட்டை சதம் அடித்தவர்களில் 3-வது இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஸ்கோர் 486 ரன்னாக உயர்ந்த போது 5-வது விக்கெட் ஜோடி பிரிந்தது. நிலைத்து நின்று ஆடிய ஜாக் கிராவ்லி 267 ரன்கள் (393 பந்து, 34 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்கள் எடுத்த நிலையில் ஆசாத் ஷபிக் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி -பட்லர் ஜோடி 359 ரன்கள் திரட்டியது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும்.

சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் 152 ரன்னில் (311 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) பவாத் ஆலம் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் 40 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 15 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 154.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் பெஸ் 27 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. பின்னர் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 10.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story