அதிருப்தியால் ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகினாரா?


அதிருப்தியால் ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகினாரா?
x
தினத்தந்தி 31 Aug 2020 3:52 AM GMT (Updated: 31 Aug 2020 3:52 AM GMT)

ரெய்னா தனது வருமானம் 11 கோடியை இழப்பார் என்பதால் ரெய்னா தவறை உணர்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்று இருந்தார். அங்கு ஓட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறிய ரெய்னா, உடனடியாக நாடு திரும்பினார். 
 
சுரேஷ் ரெய்னாவின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால், இந்த பிரச்சினையால் நாடு திரும்பியிருக்கலாம் எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் ரெய்னாவை கடுமையாக விமர்சித்துள்ளார். சீனிவாசன் கூறுகையில், “ ஐபிஎல் தொடர் இன்னும் தொடங்கவில்லை.  ரெய்னா  தனது வருமானம் 11 கோடியை இழப்பார் என்பதால் ரெய்னா தவறை உணர்வார். தலைக்கனத்தால் சில நேரம் இப்படி நிகழும். யாருக்கு பிடிக்கவில்லையே, யாருக்கு மகிழ்ச்சி இல்லையோ அவர்கள் தாராளமாக திரும்பிச்செல்லாம். யாரையும் எதையும் செய்ய வேண்டும் என நம்மால் கட்டாயப்படுத்த முடியாது” என்றார். 

இதற்கிடையே,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்தியால் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரெய்னாவுக்கு  தோனிக்கு வழங்கப்பட்டதை போல பால்கனியுடன் கூடிய அறை வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து ரெய்னா முறையிட்ட போது, கொரோனா விதிமுறைகளால் உடனடியாக அறையை மாற்ற முடியாது என அணி நிர்வாகம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அவுட் லுக் பத்திரிகை இந்த செய்தி வெளியிட்டுள்ளது. தோனியால் ரெய்னாவை சமாதானப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ரெய்னா அச்சம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

Next Story