ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி நாளை மறுநாள் தொடக்கம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி நாளை மறுநாள் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Sep 2020 12:55 AM GMT (Updated: 2 Sep 2020 12:55 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி துபாயில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

துபாய்,

இந்தியாவில் நடக்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி அரங்கேறுகிறது.

இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்து அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர். அமீரகம் சென்றதும் அனைத்து அணிகளும் தங்களது 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் அதில் 3 முறை (1, 3, 6-வது நாளில்) கொரோனா பரிசோதனையை முடித்து கடந்த வாரத்தில் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன. ஆனால் சென்னை அணி மட்டும் இன்னும் பயிற்சியை தொடங்க முடியாத நிலையில் உள்ளது.

கடந்த மாதம் 21-ந் தேதி துபாய் போய் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 நாள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்து 28-ந் தேதி தனது பயிற்சியை தொடங்க திட்டமிட்டு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதற்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் (தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட்), உதவியாளர்கள், வலைப்பயிற்சி பவுலர்கள் என மொத்தம் 13 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதனால் சென்னை அணியின் தனிமைப்படுத்தும் நாட்கள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேரும் தனியாக ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேரை தவிர்த்து சென்னை அணியின் கேப்டன் டோனி உள்ளிட்ட வீரர்கள் மற்றும் அணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதனால் சென்னை அணியினர் லேசான நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அவர்களுக்கு நாளை மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதிலும் ‘நெகட்டிவ்’ (கொரோனா இல்லை) என்று முடிவு வந்ததும் நாளை மறுதினம் (4-ந்தேதி) பயிற்சியை தொடங்கி விடுவோம் என்றும், தொடக்க லீக் ஆட்டத்தில் விளையாட சென்னை அணி தயாராக இருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார்.

மேலும் காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘தீபக் சாஹர், ருதுராஜ் ஆகியோருக்கு விதிமுறைப்படி 2 வார தனிமைப்படுத்தல் முடிந்ததும் 2 முறை கொரோனா பரிசோதனை செய்து அதில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்ததும் அணியினருடன் பயிற்சியில் இணைவார்கள்’ என்றார்.

இதற்கிடையே, சென்னை அணியில் இடம் பிடித்து இருக்கும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பேட்ஸ்மேன் பாப் டுபிளிஸ்சிஸ், வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ஆகியோர் நேற்று துபாயில் அணி வீரர்களுக்கான முகாமில் இணைந்தனர். 6 நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வார்கள்.

Next Story