இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை எந்த அணி வெல்லும்? - கெவின் பீட்டர்சன் கணிப்பு


இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை எந்த அணி வெல்லும்? - கெவின் பீட்டர்சன் கணிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2020 6:11 AM GMT (Updated: 13 Sep 2020 6:11 AM GMT)

இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பது குறித்து கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாய்,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஐ.பி.எல். தொடரில் வர்ணனையாளராக பணியாற்றவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு நேற்று முந்தினம் கிளம்பினார். அப்போது தனது பயணம் தொடங்கியதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்த பதிவில், “கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது மன நிறைவாக உள்ளது. ஐ.பி.எல். தொடரில் பணியாற்றுவது உற்சாகம் கொடுக்கிறது. இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது விளையாடும் 8 அணிகளில் ஒரு முறை கூட இறுதி சுற்றை எட்டிப்பார்க்காத ஒரே அணி, அதிகமான தோல்விகளை தழுவிய அணி (97 தோல்வி) என்று ஐ.பி.எல். சாதனை புத்தகத்தில் மோசமான வரலாற்றை பெற்றிருக்கும் ஒரு அணி எதுவென்றால் அது டெல்லி கேப்பிட்டல்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story