உலகின் எந்த பகுதியிலும் விளையாட தயார்; ஸ்ரீசாந்த் அறிவிப்பு


உலகின் எந்த பகுதியிலும் விளையாட தயார்; ஸ்ரீசாந்த் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2020 11:19 PM GMT (Updated: 15 Sep 2020 11:19 PM GMT)

உலகின் எந்த பகுதியிலும் விளையாட தயார் என்று ஸ்ரீசாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கொச்சி,

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பிறகு கோர்ட்டு உத்தரவின்படி இந்த தடையை 7 ஆண்டாக இந்திய கிரிக்கெட் வாரியம் குறைத்தது. இந்த தடை காலம் சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 37 வயதான ஸ்ரீசாந்த் நேற்று அளித்த பேட்டியில், ‘என்னை அழையுங்கள், உலகின் எந்த இடத்திற்கும் வந்து விளையாட தயாராக இருக்கிறேன். கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ஏஜென்டுகளிடம் பேசி வருகிறேன். 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம். இதே போல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எம்.சி.சி., ரெஸ்ட் ஆப் வேர்ல்டு அணிகள் விளையாடும் போட்டியிலும் ஆட விரும்புகிறேன்’ என்றார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவரான ஸ்ரீசாந்த் 27 டெஸ்ட், 53 ஒரு நாள் மற்றும் 10 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

Next Story