ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வீழ்த்தியது


ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வீழ்த்தியது
x
தினத்தந்தி 19 Sep 2020 11:45 PM GMT (Updated: 19 Sep 2020 9:17 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

அபுதாபி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

அபுதாபியில் நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அமர்க்களமாக தொடங்கிய ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 ரன்களில் (10 பந்து) பியுஷ் சாவ்லாவின் சுழலில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய டி காக் 33 ரன்களில் (20 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் சவுரப் திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து மும்பை அணியின் ரன்வேகத்தை அதிகப்படுத்தினர். ஜடேஜாவின் பந்து வீச்சில் பாண்ட்யா இரண்டு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டார். அவரது இன்னொரு ஓவரில் சிக்சருக்கு முயற்சித்து எல்லைக்கோடு அருகே பாண்ட்யா (14 ரன்) சிக்கினார். இதற்கிடையே சவுரப் திவாரி 42 ரன்கள் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் நடையை கட்டினார். பொல்லார்ட்(18 ரன்), குருணல் பாண்ட்யா (3 ரன்) சோபிக்கவில்லை.

180 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்த்த வேளையில் கடைசி கட்டத்தில் சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் அந்த அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சென்னை தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டும், சாவ்லா, சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன் (4 ரன்) டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சிலும், முரளிவிஜய் (1 ரன்) பேட்டின்சன் பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய அம்பத்தி ராயுடு அதன் பிறகு அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து அசத்தியதுடன் ஐ.பி.எல்.-ல் தனது 19-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 121 ரன்களாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு 71 ரன்களில் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா (10 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பிறகு வந்த சாம் கர்ரன் 6 பந்தில் 18 ரன்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தார். ஆனாலும் ஆட்டம் கடைசி ஓவருக்கு நகர்ந்ததால் பரபரப்பு தொற்றியது.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 2 பந்தையும் பிளிஸ்சிஸ் பவுண்டரிக்கு விரட்டியடித்து இலக்கை எட்ட வைத்தார்.

சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 58 ரன்களுடனும் (44 பந்து, 6 பவுண்டரி), டோனி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். மும்பைக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

‘மெகா திரை ரசிகர்கள்’


கொரோனா அச்சத்தால் இந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேலரிகள் வெறுமையாக காட்சி அளித்தது. இருப்பினும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பவுண்டரி, சிக்சர்கள் அடிக்கப்பட்ட போது மைதானத்தில் உள்ள மெகாதிரையில் ரசிகர்களின் கரவொலி ஆர்ப்பரிப்பும், நடன அழகிகளின் துள்ளல் நடனமும் அடங்கிய பழைய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

சிலிர்க்க வைத்த கேட்ச்


மும்பை வீரர் சவுரப்திவாரி, சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே நின்ற அனுபவ வீரர் பாப் டு பிளிஸ்சிஸ் தாவி குதித்து கேட்ச் செய்தார். இருப்பினும் தடுமாறிய அவர் பந்தை உள்பக்கமாக மேலே தூக்கிப்போட்டு விட்டு எல்லைக்கோட்டை கடந்தார். பிறகு உடனடியாக மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் செய்தார். இதே போல் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்தையும் கேட்ச் செய்து பிளிஸ்சிஸ் சிலிர்க்க வைத்தார்.

Next Story