பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி


பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி
x
தினத்தந்தி 20 Sep 2020 11:45 PM GMT (Updated: 20 Sep 2020 7:50 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சந்தித்தன. பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பெறவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு பேரிடி விழுந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக, பிரித்வி ஷா (5 ரன்), ஹெட்மயர் (7 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். இதனால் தகிடுதத்தம் போட்ட டெல்லி அணி ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 23 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஆனால் முக்கியமான கட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்கோர் 86 ரன்களை எட்டிய போது ரிஷாப் பண்ட் 31 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 39 ரன்களிலும் (32 பந்து, 3 சிக்சர்) வெளியேறினர். இதனால் மறுபடியும் டெல்லி அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. ரன்ரேட்டும் 6-க்கும் குறைந்தது.

ஸ்டோனிஸ் அதிரடி அரைசதம்

விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் தாக்குப்பிடித்து ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் டெல்லி அணியை நிமிர வைத்தார். எதிர்பார்ப்பையும் மிஞ்சி கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினார். குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் வீசிய 20-வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி தெறிக்க விட்டார். அந்த ஓவரில் வைடு, நோபால் உள்பட மொத்தம் 30 ரன்கள் கிடைத்தது.

வாணவேடிக்கை காட்டி சவாலான ஸ்கோருக்கு வழிவகுத்த ஸ்டோனிஸ் 53 ரன்களில் (21 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 57 ரன்கள் திரட்டினர். பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி 4 ஓவர்களில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். காட்ரெல் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

டை ஆனது

அடுத்து 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் தொடக்கத்தில் திணறியது. கேப்டன் லோகேஷ் ராகுல் (21 ரன்), கருண் நாயர் (1 ரன்), நிகோலஸ் பூரன் (0), மேக்ஸ்வெல் (1 ரன்), சர்ப்ராஸ் கான் (15 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த பஞ்சாப் அணியை மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் காப்பாற்றினார். தனி வீரராக போராடிய அவர் வெற்றி நெருங்கிய சமயத்தில் கோட்டை விட்டார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. ஸ்டோனிஸ் வீசிய இந்த ஓவரில் முதல் 4 பந்தில் பவுண்டரி, சிக்சருடன் 12 ரன் எடுத்த மயங்க் அகர்வால் (89 ரன், 60 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), புல்டாசாக வந்த 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்து கேட்ச் ஆனார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது கிறிஸ் ஜோர்டானும் (5 ரன்) கேட்ச் ஆனார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டை (சமன்) ஆனது.

டெல்லி வெற்றி

இதையடுத்து வெற்றி-தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன் மட்டுமே எடுத்தது. 3 ரன் இலக்கை 2-வது பந்திலேயே எடுத்து டெல்லி அணி திரில் வெற்றியை பெற்றது.

Next Story