ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு


ஐபிஎல் கிரிக்கெட்:  மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
x
தினத்தந்தி 23 Sep 2020 1:39 PM GMT (Updated: 23 Sep 2020 1:39 PM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அபுதாபி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஆபுதாபியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் களம் காணுவதால் இந்த முறை ஆடுகளத்தன்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஆடுவதற்கு முயற்சிப்பார்கள். முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின்வரிசையில் தடுமாறி விட்டனர். ஆனாலும் பந்து வீச்சு, பேட்டிங்கில் வலுவான அணியாகவே மும்பை அணி தென்படுகிறது.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் மோர்கன், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த புயல்வேக வீரர் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப், ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என்று நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் நம்பிக்கையோடு சவாலை தொடங்குகிறது.


Next Story